Monday, June 3, 2013

A.K. ரிபாய் சாஹிப்

     தென்காசி மேடை முதலாளி என்று தென் தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப் பட்டு வந்த குடும்பத்தின் பேரப்பிள்ளை அஹமது  கபீர் ரிபாய்.

மு.ந.அப்துல் ரஹ்மான் சாஹிப் , காயிதே மில்லத் இருவரும் சகலபாடிகள்.

 ஆடுதுறைப் பெருவணிகர் ஜமால் முஹம்மது சாஹிப். சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரி, இன்னுமுள்ள ஜமாலியா அறக்கட்டளைகளின் நிறுவனர். திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரி இவர் பெயரிலேயே இயங்கி வருகிறது. இந்த ஜமால் முஹமது சாஹிபின் தம்பி ஜமால் அப்துல்லாஹ் சாஹிபின் மூத்த மகளார் ஜமால் பாத்திமாவை மு.ந. அப்துல் ரஹ்மான் சாஹிப் திருமணம் செய்திருந்தார். இரண்டாவது மகள் ஜமால் மரியமை, மு.ந.அ  அவர்களின் தம்பி மு.ந. முஹம்மது சாஹிப் நிக்காஹ் புரிந்து இருந்தார். அடுத்த மகள் ஜமால் ஹமீதாவை காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் மணம் செய்திருந்தார். இந்த மூவரும் தமிழக முஸ்லிம்கள் வரலாற்றில் குறிக்கத்தக்கப் பெருமைக்குரியவர்கள். அல்ஹம்து லில்லாஹ்.

மு.ந.அ  - தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் நிறுவனத் தலைவர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில துணைத் தலைவர்.

காயிதே மில்லத் மறைந்த உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தற்காலிகத் தலைவராக சில மாதங்கள் இருந்தார். அதன் பின் கேரளத்து பாபக்கி தங்கள் அப்பொறுப்பை ஏற்றார்.

 காயிதே மில்லத் - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர்.

மு.ந.மு - திருநெல்வேலி முஸ்லிம் அனாதை நிலைய நிறுவனத் தலைவர்.

                     அண்ணலாரின் வாழ்க்கை வரலாற்றைத்  தமிழ் உரை நடையில் முதன்முதல் திருநபி சரித்திரம் என்ற பெயரில் எழுதி நூலாக  வெளியிட்டவர்.

மு.ந.அ வின் மூத்த மகனார் A.K. ரிபாய் சாஹிப். இரண்டாவது மகனார் தமிழகச்  சட்டமன்ற கடையநல்லூர் தொகுதி  முன்னாள் உறுப்பினர். ஷாகுல் ஹமீது சாஹிப் .

அடுத்து மகளார் காதர் ஹைருன்னிஷா பேகம்.

 மு.ந.அ  1952 இல் தமிழக சட்டமன்ற திருநெல்வேலி தொகுதி முஸ்லிம் லீக் உறுப்பினர்.

மு.ந.முஹம்மது சாஹிப் 1939 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் மேலவை உறுப்பினர்.

A.K.ரிபாய் சாஹிபின் சிறிய தந்தை மு.ந.மு. அவர்களின் மூத்த மகனார் ஜமால் முஹம்மது சாஹிப் - இவர், இவரின்  தந்தையார் மறைவிற்கு பின் முஸ்லிம் அனாதை நிலையத்தின் தலைவராக வாழ்நாள் முழுதும் இருந்து வந்தார்.

ஜமால் முஹம்மது சாஹிபின் துணைவியார் காதர்  ஹைருன்னிஷா பேகம். இவர் நெல்லை முஸ்லிம் சிறுமியர் கல்வி நிலையத்தின் நிறுவனத் தலைவியர். இவர் A.K.ரிபாய் சாஹிபின் தங்கை.

தி.மு.க. வின் கூட்டணியோடு முஸ்லிம் லீக் 1962 இல் தேர்தலை விடுதலைக்குப் பின் முதன்முதல் சந்தித்தது. இதில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் காயிதே மில்லத்தின் தம்பி K.T.M.அஹமது இப்ராஹிம் சாஹிப் முஸ்லிம் லீக் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

தென்காசி தொகுதிக்கு முஸ்லிம் லீக் வேட்பாளராக  A.K.ரிபாய் சாஹிப் போட்டியிட்டார். வட சென்னை மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளராக A.K.A.அப்துல் ஸமது சாஹிப்   போட்டியிட்டார். நாகப்பட்டணம் சட்டமன்றத் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளராக கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் போட்டியிட்டார். இன்னும் மூவரும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். இவர்கள் அனைவருமே வெற்றி வாய்ப்பை இழந்தார்கள்.

1966 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ் மாநிலத்தின் மாநில செயலாளராக முஸ்லிம் லீகின் தொடக்கக் காலத்திலிருந்து பதவி வகித்து வந்த K.T.M. அஹமது  இப்ராகிம் சாஹிப் மறைந்தார்கள். அதைத் தொடர்ந்து தமிழ் மாநில முஸ்லிம் லீகின் மாநில செயலாளராக 1979 வரை A.K. ரிபாய் சாஹிப் பதவி வகித்து வந்தார்.

1972 தமிழ் நாடு சட்டமன்றத்தின் உறுப்பினர்களால் டெல்லி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர்களில் முஸ்லிம்  லீக் சார்பில் A.K.ரிபாய் சாஹிப்  தேர்ந்தெடுக்கப் பட்டார். அந்த நேரத்தில் உடன் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்களில் அதிகமாக வாக்குகளைப்  பெற்று வெற்றிப் பெற்றவர் A.K.ரிபாய் சாஹிப்.

1979 க்கு பின்னர் தந்தையார் நிறுவனத் தலைவராக இருந்து வந்த தென் இந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் தலைவராகவும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில முதல் துணைத் தலைவராகவும் தன் வாழ்நாள் முழுவதும் பொறுப்பு வகித்து வந்தார்.

1998-ம் ஆண்டு  தன் மூத்த மகனார் A. நத்ஹர் பாவா ஜலால் மற்றும் அவர் தம் துணைவியார் Dr. ஹிப்பத் பாத்திமா உடன் ஹஜ் கடமை நிறைவேற்றச் சென்றார் A.K.ரிபாய் சாஹிப். மதினத்தில் கடமைகளை நிறைவேற்றி விட்டு மக்கத்தில் இருந்த காலத்தில் மார்ச் 21-ல் மக்ரிப் தொழுகையை நிறைவேற்றி வந்து அமர்ந்த நிலையில் அவரே தன் கபன் துணியை மேலே போர்த்திக் கொண்ட நிலையில் இறை நாட்டப்படி இறைவனளவில் சேர்ந்தார்.         

அவரின் ஜனாஸா கஅபாவில் பஜ்ர் தொழுகை முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஜனாஸா தொழுகையில் பங்கு பெற மக்காவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

A.K.ரிபாய் சாஹிபின் துணைவியார் ஆமினா அம்மையார்.

இவர்களின் வாரிசுகள் :

1. A. நத்ஹர் பாவா ஜலால். M .Sc . (Agri )
(தமிழகத் தோட்டக் கலைத்துறை முன்னாள் இணை இயக்குனர்.)
2. A. அப்துல் ரஹ்மான் பாரூக். B.Sc
3. A. முஹம்மது சாஹிப் பிலால்
4. . ஹிலால் முஸ்தபா
5. A. முஹம்மது இஸ்மாயில் ரபீக் (Auditor)


A.K. ரிபாய் சாஹிபின் நிலையான வாரிசுகள்!
(அவரெழுதிய நூற்கள்)

1. அற்புதச் சாதனைகள்
2. என்னைக் கவர்ந்த இஸ்லாம். (மொழி பெயர்ப்பு) - லியோ பால்டு அஸது வாழ்க்கை வரலாறு.
3. விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும். (மொழி பெயர்ப்பு) - மாரிஸ் புகைல்.
4.  நாயகமே ! நாயகமே! எங்கள் நபி நாயகமே!
5.  ஞானப் பெண்ணே! உன்னைத் தான் !
6.  கவ்மின் காவலர் (காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு).
7.  காயிதே ஆஜம் (முஹம்மதலி ஜின்னாஹ் வாழ்க்கை வரலாறு)
8.  சமுதாய நீரோட்டத்தில் சங்கமம் (மு.ந.அ வாழ்க்கை வரலாறு)
9.  ஆயிரம் மலர்களே மலருங்கள் (சமூக நவீனம்)
10.  மைசூர் வேங்கையின் சபதம் (வரலாற்று நவீனம்)
11. A.K.R. இன் இஸ்லாமிய சிறுகதைகள்
12. 21 - ஆம் நூற்றாண்டில் இஸ்லாம்.
13. தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு.
14. 21 - ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மார்க்கம்.
15. திரு குர்ஆன் சிந்தனைகள்
16. திருச்சி மறுமலர்ச்சி வார இதழில் "குற்றவாளிக் கூண்டில் காந்திஜீ" - தொடர் எழுதினார். இன்னும் நூல் வடிவம் பெறவில்லை.
17. நெல்லை அனாதை நிலையத்தின் சார்பாக சமுதாய நலச் சங்கம் வெளியிட்ட காயிதே மில்லத் மலர் தொகுப்பு ஆசிரியர்.

18. பண்டிதர் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த பேராசிரியர் ஹுமாயூன்  கபீர் ( ஜார்ஜ் பெர்னாண்டஸின் மாமனார்) எழுதிய மக்களும் நதிகளும் எனும் நாவலை A.K.ரிபாய் சாஹிப், மகனீ, முஹம்மது கவுஸ் மூவரும் இணைந்து தமிழாக்கம் செய்து வெளியிட்டனர். இந்நூல் ஒரு பிரதிக் கூட இப்போது இல்லை. (இருப்பவர்கள் தயவு செய்து தந்து உதவுங்கள்).

19. 1963 இல் உதயமான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் உரிமையான வார இதழ் "உரிமைக் குரலின்" ஆசிரியராகக் கடைசி வரை  பணிபுரிந்தார். இதில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதி இருக்கிறார். அவற்றுள் வியட்நாம் - அமெரிக்க யுத்தம் பற்றிய தொடர் அனைவராலும் பாராட்டப் பட்டது.

20. பிறை மாத இதழில் "மனக்கோட்டை" என்ற தொடர்கதையை ஆமினா என்ற புனை பெயரில் எழுதினார். இந்தக் கதை நூல் வடிவம் பெறவில்லை.

குறிப்பு :
நெல்லை முஸ்லிம் அனாதை நிலையத்தின் அமைப்பான தமிழ் நாடு முஸ்லிம் சமுதாய நலச் சங்கத்திற்கு உரிமையுள்ள "இஸ்லாமிய சகோதரத்துவக் குரல்" மாத இதழில் "ஹஸினாவின் கணவர்கள்" என்ற தொடர் கதையினை எழுதி வந்த வேளையில் தான், ஹஜ்ஜுக்கு சென்று இறை நாட்டப்படி மறைந்தார்கள். ஆனால் இந்தத் தொடர்கதை முழுவதையும் எழுதி பத்திரிகை அலுவலகத்திற்கு ஏற்கனவே  தந்திருந்தார்கள். இதுதான் A.K.ரிபாயின் கடைசி எழுத்துப் பணி. இன்னும் நூலாகவில்லை. அந்த நேரத்தில் அப்பத்திரிகையின் ஆசிரியராக. ஹிலால் முஸ்தபா பொறுப்பு வகித்திருந்தார்.

ஊடகங்களில் A.K. ரிபாய் சாஹிபின் பணிகள்!

K .T .M அஹமத் இப்ராஹிம் சாஹிப் ஆசிரியராக இருந்து வெளிவந்த முஸ்லிம் லீகின் மாத இதழ் "முஸ்லிம் " பத்திரிகையின் துணை ஆசிரியராக A .K .ரிபாய் சாஹிப் பணியாற்றி உள்ளார். பத்திரிகை அலுவலகம் சென்னை மவுண்ட் ரோடில் இருந்தது.

A.K.A.அப்துல் ஸமது சாஹிப் ஆசிரியராக இருந்து வெளிவந்த "மணிச்சுடர்" நாளிதழின் மூன்றாம் பக்கக் கட்டுரை தொடர்ந்து எழுத A.K.A.அப்துல் ஸமது சாஹிப், ரிபாய் சாஹிபை வற்புறுத்தி அழைத்தார்ரிபாய் சாஹிப் அப்பொழுது தனது வாவா நகர கிராமத்தில் குடி பெயர்ந்திருந்தார். ஒரு உறுதி மொழியின் பெயரில் முதல் ஆறு மாதங்கள் தினம் தொடர்ந்து மூன்றாம் பக்கக் கட்டுரையை எழுதி வருவேன். அதன் பின் சொந்த கிராமத்திற்கு திரும்பி விடுவேன் என ஸமது சாஹிபிடம் கூறினார். ஸமது சாஹிபும் ஒப்புக்கொண்டு வரவேற்றார். மணிச்சுடரில் தொடங்கிய முதல் ஆறு மாத காலத்துக்கு அற்புதமான கட்டுரைகள் வந்தன.

முஸ்லிம் நாளிதழிலோ, உரிமைக்குரல் வார இதழிலோ, மணிச்சுடர் நாளிதழிலோ பணி புரிந்ததற்காக ஒரு பைசா கூட சம்பளமோ, வெகுமானமோ A.K.ரிபாய் சாஹிப் வாங்கியதே இல்லை.


A.K.A.அப்துல் ஸமது சாஹிபின் தந்தையார் ஆசிரியராக இருந்த மணி விளக்கு மாத இதழ் ஆசிரியர் குழுவிலும் பணி ஆற்றினார் A.K.ரிபாய் சாஹிப்.       

1 comment:

  1. அரிய மனிதரின் அற்புதத் தகவல்கள் இவை.....இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete