'ஹஸன்'
(சரித்திர ஆசிரியர் செய்யதுனா
முஸ்லிம் முரசு மாத இதழில் எழுதிய தொடர்)
1967ல் முதலமைச்சரான அண்ணா அடுத்த
ஓராண்டிற்குள் 1968ல் காலமானார்.
அடுத்த முதலமைச்சர் தேர்ந்தெடுக்கும் முன்பாக
நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம்
செய்விக்கப்பட்டார். அவர் செய்ய வேண்டியிருந்த முதல் காரியம் அண்ணாவின் அடக்கவிடத்திற்கு
ஏற்பாடு செய்வதுதான்.
மெரீனா கடற்கரையில் சமாதி அமைப்பது
என்பதுதான் அவர் எடுத்த முடிவு.
மீண்டும் பல ஆண்டுகள் கழிந்த பிறகு
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்து காலமான போதும், அவரே முதலமைச்சராக இருந்து
மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் உடலை அடக்க ஏற்பாடு செய்தார்.
நம் முஸ்லிம் புலவர்கள் பெரும்பாலானோர்
வலீமார்களாக விளங்கியவர்கள். அவர்களைப் பற்றி துச்சமாக நினைத்துப் பேசிய
நெடுஞ்செழியன், எந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன் என்று சொன்னாரோ அதை அவரே செய்ய
நேர்ந்தது விசித்திரமல்லவா?
மீண்டும் 1967க்கு வருவோம். முஸ்லிம்
புலவர்களுக்கு நினைவுச் சின்னம் நிறுவ அனுமதி மறுக்கப்பட்டது, அதுவும் அண்ணாவின்
ஆட்சியில், முஸ்லிம்களுக்கு பேரதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதைக் கண்டித்து
முஸ்லிம் முரசில் நீண்ட கட்டுரை எழுதினேன். அதைக் காங்கிரஸ்காரர்கள் எடுத்து நன்கு
பயன்படுத்தினர்.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியாயாவில் எல்லாம்
அது மறுபிரசுரமாயிற்று. முஸ்லிம் லீக்கினர் அந்த நிலை நீடிப்பதை விரும்பவில்லை.
அதற்கு மாற்றாக முஸ்லிம் முரசு முஸ்லிம் லீக் விரோதப் பத்திரிகை, தி.மு.க.வுக்கும்
முஸ்லிம் லீக்குக்கும் இடையே பிளவு ஏற்படுத்த முனைகிறது என்றெல்லாம் தாக்கத்
தொடங்கினர். காயிதேமில்லத்தும் மற்ற சில தலைவர்களும் தி.மு.க. தவறு செய்துவிட்டது
என்று கருதினாலும் அந்த விஷயம் பெரிது படுத்தப்படுவதை விரும்பவில்லை.
ரிபாயி சாஹிப் இவ்விஷயத்தில் நடுநிலை
வகித்தார். அதோடு அவர் ஊரிலேயே அதிக காலம் செலவழித்து வந்ததால், அவருக்குப் பதிலாக
உரிமைக் குரலை கவனித்து வந்தவர்கள் முரசுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே
வந்தனர். அவற்றிற்கெல்லாம் பதில் எழுத வேண்டிய நிர்பந்தம் முரசுக்கு ஏற்பட்டுக்
கொண்டிருந்தது.
1970ல் ஒரு நாள் காயிதேமில்லத் அவர்களைக் காணச்
சில நண்பர்களுடன் நானும் சென்றிருந்தேன். அவர்கள் வழக்கம்போல என்னை நேராகப்
பார்த்து அன்று எதுவும் பேசவில்லை. விடைபெற்று நாங்கள் எழுந்ததும் சற்று நின்று, மற்ற நண்பர்களை நோக்கி, என்னைச்
சுட்டிக்காட்டி "This man was responsible for my starting Urimai Kural. Now
he is trying to destroy it" (நான் உரிமைக் குரலைத் தொடங்குவதற்கு இந்த
மனிதன் தான் காரணமாக இருந்தார். இப்போது அதை அழிக்க முயற்சி செய்கிறார்) என்று
வேகமாகப் பேசினார்கள்.
"இப்போது உரிமைக் குரலை நடத்துபவர்கள்
என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள். நான் வேறுபட்ட கருத்தை
வெளியிடுகிறேன் என்பதற்காக. அதற்கெல்லாம் நான் பதிலளிக்கிறேனே தவிர உரிமைக்
குரலுக்கு எதிராக எதையும் எழுதுவதில்லையே" என்றேன்.
தலைவரவர்கள் பதில் எதுவும் பேசவில்லை.சலாம்
சொல்லி விடைபெற்று வந்தேன். அதற்குப் பிறகு அவர்களைச் சென்று பார்த்து பேசும்
பாக்கியம் கிடைக்கவில்லை.
அதற்கு முன்பெல்லாம் ஆண்டுக்கணக்கில்,
எத்தனையோ தடவை காலையிலிருந்து இரவு பத்து மணிவரை எங்களை உட்கார வைத்து பேசிக்
கொண்டே இருப்பார்கள். கடைசி எலக்ட்ரிக் ரயிலைப் பிடித்து இல்லம் திரும்புவார்கள்.
இடையில், பார்க்க வந்த எத்தனையோ பேர்களை
திரும்பிப் போய் மறுநாள் வரச்சொல்லி விடுவார்கள். "இவர்கள் பத்திரிக்கைக்
காரர்கள். நான் சொல்லும் செய்திகளைக் கேட்டுக் கொண்டு போய் மக்களுக்கு மத்தியில்
பரப்புவார்கள். செய்திகளை எட்டச் செய்வார்கள். எனவே இவர்களுடன் பேசுவதுதான்
முக்கியம்" என்று சொல்லி விடுவார்கள்.
அப்படிப் பட்டவர்கள் கடைசி காலத்தில் என்
மீது வருத்தம் அடைய நேர்ந்தது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எனினும்
முஸ்லிம் முரசு கட்சி ஏடல்ல, சுதந்திரமாகச் செயல்பட்ட பத்திரிகை என்பதால் அக்கட்சி
முடிவுகள் சில சமுதாயத்தைப் பாதிக்கும் என்று தோன்றும் போதெல்லாம் மாற்றுக்
கருத்தை வெளியிடத் தயங்கியதில்லை.
முஸ்லிம் லீக்கிற்காக ஆங்கில தினசரி ஏடான
"டான்" (Dawn) என்னும் ஆங்கில பத்திரிக்கையின் முதல் ஆசிரியராக
நியமிக்கப்பட்ட அல்தாப் ஹுசைன் என்பவரை நோக்கி "பத்திரிகையில் துணிச்சலுடன்
எழுத வேண்டும். தவறு என்று பட்டால் தாட்சண்யமின்றி, சுட்டிகாட்டி எழுத வேண்டும்.
உங்களின் காயிதே ஆஸமே தவறு செய்தாலும் அஞ்சக் கூடாது" என்று காயிதே ஆஸம்
முஹம்மது அலி ஜின்னா சாஹிபே கூறினார்.
ஒரு முறை கட்சி முடிவு தவறானது என்று
விமர்சித்து எழுதிய கட்டுரை வெளிவந்த பக்கத்திலேயே ஜின்னாஹ் சாஹிபின் மேற்சொன்ன
அறிவுரையை பெட்டிச் செய்தியாகப் போட்டு விட்டு என் விமர்சனத்தை முடித்திருந்தேன்.
அதைப் பார்த்த காயிதே மில்லத் அவர்கள் "
செய்வதை சாமர்த்தியமாகத்தான் செய்கிறார்" என்று குறிப்பிட்டதாக நண்பர்கள்
மூலம் அறிந்தேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ராஜ்யசபைத்
தேர்தல் 1972 ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்தது. 1970ல் ஜனாப் ஏ.கே.ஏ. அப்துஸ் சமது
சாஹிப் அவர்கள் ராஜ்யசபை உறுப்பினராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி
வகித்து வந்தார். அதற்கு முன்பாக எஸ்.ஏ. காஜா முஹ்யித்தீன் அவர்கள் ராஜ்யசபை
உறுப்பினராக பதவியில் இருந்தார். 1972 ராஜ்யசபைத் தேர்தலிலும் தனக்கு ஒரு ஓர் இடம்
ஒதுக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம் லீக் கோரியதை தி.மு.க. ஏற்றது.
அந்த இடத்திற்கு ரிபாயி சாஹிபி வேட்பாளராக
நிறுத்த காயிதேமில்லத் முடிவு செய்தார்கள். கலைஞரின் தலைமையிலான தி.மு.க. அரசும்
அதை ஏற்றுக் கொண்டது. இதற்கிடையே காயிதேமில்லத் அவர்களும் தீவிர நோய்வாய்ப்பட்டு
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.
தி.மு.க. வாக்களித்தபடி ரிபாயி சாஹிப்
ராஜ்யசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தச் செய்தியை காயிதே மில்லத் அவர்கள்
அறிந்து கொள்ள முடியாதபடி நினைவிழந்த நிலையில் இருந்தார்கள்.
05.04.1972 அன்று காயிதேமில்லத் அவர்கள்
காலமானார்கள்.(இன்னாலில்லாஹி..)
No comments:
Post a Comment